Search This Blog

Pages

Sunday, September 16, 2012

நவீன தாக்குதலை எதிர்கொள்ள தயாரா..?


cyber war against muslims
நவீன விஞ்ஞான உலகில் இணைதள வசதி மிக வேகமான வளர்ச்சி கண்டுள்ளது. இதனால் பல்வேறு பயன்கள் கிடைப்பது போன்றே பல தீமைகளும் , குற்றங்களும் உருவாகியுள்ளன. நிகழ்கால உலகில் பல நாடுகளுக்கு தலைவலியாக உருவெடுத்துள்ள பிரச்சனை சைபர் குற்றங்களாகும். ஆபாசங்களை பரப்புதல், மத இன துவேஷ கருத்துக்களை பரப்புதல், இணையதளத்திலிருந்து தகவல்களை திருடுதல், குறிப்பிட்ட தளத்தை ஒரே நேரத்தில் ஏராளமானோர் நுழைந்து முடக்குதல் போன்றவை வல்லரசு நாடுகளையும் ஆட்டிப் படைத்து வருகிறது. இதை எப்படி எதிர்கொள்வது?முறியடிப்பது என்று பல நாடுகள் திணறி வருகின்றன. அடுத்த உலகப் போர் சைபர் யுத்தமாக இருக்கலாம் என்றும் கணிக்கப்படுகின்றது.
இஸ்லாத்திற்கெதிரான சைபர் யுத்தம்
இஸ்லாத்தை அழிப்பதை இலட்சியமாக கொண்டு வாழ்வோர் தற்போது சைபர் யுத்தத்தை இஸ்லாத்திற்கெதிராக தொடங்கியுள்ளனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை கேவலமாக சித்திரித்து கார்ட்டூன் வரைவது, திருக்குர்ஆனை எரிப்பதை இணையதளத்தில் வீடியோ பதிவேற்றமாக வெளியிடுதல் போன்றவை இவ்வகையைச் சார்ந்ததே.
இப்போது அமெரிக்காவைச் சேர்ந்த சாம் பாசைல் எனும் கிறிஸ்தவ பாதிரியார் இறைத்தூதர் (ஸல்) அவர்களைப் பற்றி தயாரித்த திரைப்படத்தின் ட்ரைலர் காட்சி தற்போது யூ ட்யூபில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ இஸ்லாமிய உலகில் கடும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பாசைல் தாம் தயாரித்த அப்படத்தில் நபி (ஸல்) அவர்களும், முஸ்லிம்களும் சகிப்புத்தன்மையற்றவர்கள் என்று கூறியுள்ளான்.
இணையதளங்களைப் பொருத்தவரை யார் வேண்டுமானாலும் தமது பதிவேற்றங்களை வெளியிடக்கூடிய நிலையில் உள்ளது. இனிவரும் காலங்களில் இது அதிகமாகவும் வாய்ப்புள்ளது. பல்வேறு நபர்கள் ‘அமைப்புகள்’ ஆதரவுடன் கூட்டாக அல்லது தனியாக இதை செய்ய ஆரம்பித்தால் ஒவ்வொன்றுக்கும் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருக்க முடியாது. அவ்வாறு நடத்தி அதில் வன்முறை வெடித்தாலும் எதிரிகள் தங்களின் கருத்தில் வெற்றி பெற்று விடுவார்கள்.
முஸ்லிம்கள் என்ன செய்ய வேண்டும்?
புதிதாக தொடங்கியுள்ள இந்த சைபர் யுத்தத்தை முஸ்லிம்கள் கவனமாகவே கையாள வேண்டும். இது ஒரு வகையான அறிவு யுத்தம். இதில் ஆயுதங்கள் உபயோகப்படுத்தப் படுவதில்லை. ஆதலால் இதில் வேகப்படுவது புத்திசாலித்தனம் அல்ல.. விவேகமே இதில் வெற்றியைத் தரும்.
இதற்கான தீர்வுகள்
1 இதை வெளியிடும் இணையதள நிறுவனர்களிடம் நேரடியாக பேசி உண்மையை விளக்கி இதை அப்புறப்படுத்த வேண்டும்.
1988 ம் ஆண்டு சல்மான் ருஷ்டி தமது நான்காவது நாவலாக சாத்தானின் கவிதைகள் The satanic verses எனும் நாவலை வெளியிட்டான். அச்சமயத்தில் வாழ்ந்த மறைந்த இந்தியாவின் மாமேதை பேரறிஞர் அபுல் ஹஸன் அலி நத்வி (ரஹ்) அவர்கள் தாமே நேரடியாக இந்நூலை வெளியிட்ட கேம்ப்பிரிட்ஜ் பல்கலைக்கு சென்று அந்நாவலின் கருத்துக்கள் பொய்யானது என்பதை ஆதாரங்களை சமர்ப்பித்து நிரூபித்தார்கள். கேம்ப்பிரிட்ஜ் நிர்வாகம் வெளியிட்டதற்கு மன்னிப்பு கேட்டது. தமது நூலகத்தில் இருந்து அதை அகற்ற ஒப்புக் கொண்டது. அகற்றவும் செய்தது. இவ்வழியை முஸ்லிம்கள் கையாள வேண்டும்.
2. இதை இஸ்லாத்திற்கு சாதகமாக மாற்ற வேண்டும்.
இதன் மூலம் எதிரிகள் இஸ்லாத்திற்கு கெட்ட இமேஜை ஏற்படுத்த முயற்சிப்பதைப் போன்று இதன் மூலமே நாமும் இஸ்லாத்தை வளர்க்க வேண்டும். தீமையையும் நன்மையாக மாற்றும் வலிமை நிச்சயம் முஸ்லிம்களுக்கு உண்டு. நவீன உலகில் பேஸ்புக் சமூக வலைத்தளத்தை முஸ்லிமல்லாதவர்கள் தவறான செய்கைகளுக்கே பயன்படுத்தி வந்தனர். பேஸ்புக் என்றாலே ‘தீமையின் பிறப்பிடம்’ என்றே பார்க்கப்பட்டது. தீமைக்கு பயன்பட்ட அதனை நன்மைக்கு பயன்படுத்த முடியும் என்று முஸ்லிம்கள் நிரூபித்தார்கள். எகிப்து, துனிஷியா புரட்சியில் ‘பேஸ்புக்’ முக்கிய பங்கு வகித்தது. அதாவது அதன் மூலம் இஸ்லாமிய விரோதிகளை ஆட்சியிலிருந்து அகற்றி, மெய்யான இஸ்லாமிய ஆட்சியை அந்நாடுகளில் முஸ்லிம்கள் ஏற்படுத்தினார்கள்.
சில பித்னாக்கள் மூலம் இஸ்லாமிய வரலாற்றில் முஸ்லிம்களுக்கு நன்மை ஏற்பட்டுள்ளது.
உதாரணமாக அன்னை ஆயிஷா (ரழி) மீதான இட்டுக்கட்டு. அதற்காக நபி(ஸல்) அவர்கள் ஒரு மாதம் கவலைப்பட்டார்கள். என்றாலும் அதில் இந்த உம்மத்திற்கு பெரும் நன்மையை அல்லாஹ் நாடியிருந்தான். ஆதலால் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நபி(ஸல்) குறித்த நூல்களை உலமாக்கள் அதிகம் வெளியிட வேண்டும்.
சி.டி. வடிவில் உரைகளை வெளியிட வேண்டும். நபி (ஸல்) அவர்களின் பன்முகத்தன்மையை ஊடகங்கள், இணையதளங்கள், தொலைக்காட்சி நேர்காணல்கள் , பத்திரிக்கைகள் , நேரடி பிரச்சாரங்கள் வழியாக மேற்கொள்ள வேண்டும். திரைப்படத்துறை நவீன உலகில் சக்தி வாய்ந்த ஊடகம். முஸ்லிம்கள் அதனை கையில் எடுக்க வேண்டும். யூ ட்யூப் (youtube) போன்ற வீடியோ தளத்துக்கு நிகரான தளங்களை உருவாக்க வேண்டும்.
கடந்த காலங்களி்ல் அறிவியல் துறையில் நாம் கவனம் செலுத்தாததால் தான் இணையதளங்கள் அமெரிக்காவில் அடைபட்டு விட்டன. இணையதள இயக்குனரகங்கள் இஸ்லாமிய உலகில் இருந்தால் இதுவெல்லாம் நடக்குமா? அறிவியலை ஆக்கப்பூர்வமானதற்கு பயன்படுத்துபவர்கள் முஸ்லிம்களே.
3.உணர்ச்சிவசப்பட்டு, மூர்க்கமான வகையில் கோபத்தை வெளிப்படுத்தக் கூடாது.
15 ம் நூற்றாண்டில் ஸ்பெயின் இஸ்லாமியப் பேரரசை வீழ்த்துவதற்கு கிறிஸ்தவ பாதிரியார்கள் நபி(ஸல்) அவர்களை கொச்சைப்படுத்துவதையே ஆயுதமாக பயன்படுத்தினார்கள். நபி(ஸல்) அவர்களை இழிவாக பேசுவதை ஈமான் கொண்ட முஸ்லிம்கள் சம்மதிக்க மாட்டார்கள். இது இயல்பு. ஸ்பெயின் இஸ்லாமிய அரசு நபியை தவறாக பேசியவர்களுக்கு மரண தண்டனை தந்தது. இதைக் காரணமாக வைத்து, இஸ்லாமிய விரோதிகள் நாட்டில் கிறிஸ்தவர்கள் கொல்லப்படுவதாக பிரச்சாரம் செய்தனர்.கடைசியில் கிறிஸ்தவர்கள் எல்லோரும் இஸ்லாமிய அரசை வெறுக்க ஆரம்பித்தனர். கடைசியில் இஸ்லாமிய அரசு வீழ்ந்தது.
4. இதனை பரப்பக்கூடாது.
இதனை அலட்சியப்படுத்தி விட்டு. இனிமேல் அவ்வாறு யாரும் செய்தாலும் அது எடுபடாத நிலையை ஏற்படுத்த வேண்டும். தீமை பரவுவதற்கு நாமே காரணமாக ஆகக் கூடாது. அதிகமான நபர்கள் இக்காட்சியை பார்த்தால் வர்த்தக ரீதியில் வெளியிட்டவன் இலாபமடைவான்.இதற்காகவே இவ்வாறு அற்பர்கள் வெளியிடுகின்றனர் என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.
ஆர்ப்பாட்டம் தீர்வா?
ஆதலால் ஆர்ப்பாட்டம் நடத்துவது இலகுவான , அதிக உழைப்பு இல்லாத, அறிவுக்கு வேலையி்ல்லாத , ஒரு நாளில் முடிந்து விடக்கூடிய எதிர்ப்பாகும். அது மட்டுமல்ல.. இது ‘முஸ்லிம்கள் சகிப்புத்தன்மையற்றவர்கள்’ என்ற இமேஜையும் ஏற்படுத்தும். இதில் வன்முறை வெடித்தால் இதை பயன்படுத்தி இஸ்லாமிய விரோதிகள் தங்களின் காரியத்தை சாதித்துக் கொள்ளவும் வாய்ப்புகள் அதிகம்.எனவே முஸ்லிம்கள் சிந்தித்து செயல்பட வணடிய தருனம் இது.

No comments:

Post a Comment