பல்கலைக்கழகங்கள் விரிவுரையாளர்கள் பகிஸ்கரிப்பில்!! பாடசாலைகள் ஆசிரியர்களின் பகிஸ்கரிப்பை எதிர்நோக்கி; இதுதான் இலங்கை கல்வியின் இன்றையநிலை!விரிவுரையாளர்களின் பகிஸ்கரிப்பு இரண்டாவது மாதத்தை தாண்டி போய்க் கொண்டிருக்கின்றது!!!
இது இலங்கை வரலாற்றில் மிகப்பெரும் எதிர்மறையான சாதனை!! காரணம் கேட்டால் 8 அம்சக் கோரிக்கை, 16 அம்சக் கோரிக்கை என்று நிறைய அம்சங்களை சொல்கின்றார்கள்! அரசாங்கமோ இவற்றை கணக்கில்கூட எடுத்துக்கொள்வதாக தெரியவில்லை!!! எத்தனை அம்ச கோரிக்கைகள் முன்வைத்தாலும் இவர்களது முக்கிய அம்சகோரிக்கை என்னவோ ஊதிய உயர்வுதான்!!
இந்த நெடிய பணிப்பகிஸ்கரிப்பு எந்தமாதிரியான எதிர்மறை மனநிலையை மாணவர்களுக்கு ஏற்படுத்தும் என்பதை பகிஸ்கரிப்போரும், அரசாங்கமும் கண்டு கொள்ளாததுதான் மிகப்பெரும் வேதனை!!! இதுதான் வாழ்க்கை, இதனால் தான் வாழ்க்கை என கல்வியை நம்பி கல்விமீது நம்பிக்கைவைத்த அத்தனை மாணவர்களுக்கும் அரசும், முன்னாள் பல்கலைக்கழக பட்டதாரி மாணவர்களும் சேர்ந்து கொடுத்திருக்கும் பரிசுதான் மன அழுத்தமும் வெறுப்பும்!! ஆனால் இதைப்பற்றி அவர்கள் துளியளவும் கண்டு கொண்டதாக தெரியவில்லை!!! வரட்டுக் கௌரவத்தை விட்டுக்கொடுக்காமல் அரசும், விரிவுரையாளர்களும் ஒருவருக்கொருவர் சளைக்காமல் மாணவர்கள் வாழ்க்கையில் விளையாடிய வண்ணம் உள்ளனர்!!
சிலருக்கு இதில் உடன்பாடில்லாமல் இருக்கலாம், ஆனால் ஏன் அரசும் பகிஸ்கரிப்பாளர்களும் இணைந்து இலவச உயர்கல்வியை தனியார் மயப்படுத்தி காசு பார்க்க இந்த பகிஸ்கரிப்பை நாடகமாக செய்திருக்கக் கூடாது என்பதுதான்!!! தனியார் உயர்கல்வியை எதிர்ப்பது போன்ற கோரிக்கைகளை முன்வைத்துவிட்டு மறைமுகமாக மாணவர்கள் மத்தியில் “ஏன் நாம் தனியாரை நாடக்கூடாது?” என்கின்ற கேள்வியை எழுப்பும் ராஜதந்திரமாககூட இதை நோக்கலாம்!!! காரணம் இன்னமும் கல்வியை மட்டுமே நம்பி வாழ்க்கையில் சாதிக்கணும் என்று நினைக்கும் ஏழை மாணவர்கள் ஆயிரக்கணக்கில் இந்த இலவச கல்வியை நம்பித்தான் தம் வாழ்வை புடம்போட காத்திருக்கின்றார்கள்!! தெற்காசியாவில் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் கல்வியின் ஸ்திரதன்மைக்கு காரணமே இலவச கல்விதான், அதில் கைவைக்கும் எண்ணம் இருந்தால் தயவு செய்து விட்டுவிடுங்கள்!!
விலை/கட்டண உயர்வை தொடர்ந்து அடுத்து மருத்துவர்களும், ஏனைய அரசாங்க உத்தியோகஸ்தர்களும் ஊதிய உயர்வுக்கு போராட கிளம்புவார்கள்; அவர்களுக்கும் போராட்டம் வெற்றியளிக்கலாம்!!! கூடவே போட்டிக்கு தனியார் நிறுவனங்கள், வங்கிகளும் ஊதியத்தை ஊதித்தள்ளும்!!! உங்களால் ஏற்றப்படும் விலைவாசியை நீங்கள் சமாளித்துக்கொள்வீர்கள்; ஆனால் அன்றாடம் கூலிக்கு மாரடிக்கும் இலட்சக்கணக்கான குடும்பங்களின் நிலை என்ன? பீடி சுற்றுவதிலும், தேயிலை/இறப்பர் தோட்டங்களிலும், பெட்டிக்கடைகளிலும், தையல் கடைகளிலும், புடவைக்கடைகளிலும், சிறு தொழிற்சாலைகளிலும், பலசரக்கு கடைகளிலும், பார்மசிகளிலும், உணவகங்களிலும் 5,000 – 10,000 மாத சம்பளத்திற்கும் வேலை பார்த்து குடும்பத்தை காப்பாற்றும் கீழ்த்தட்டு, நடுத்தட்டு படிப்பறிவு இல்லாத இலட்சக்கணக்கானவர்களை பற்றி கொஞ்சமேனும் இவர்கள் சிந்திக்கின்றார்களா? விவசாயிகளும், தோட்டக்காரர்களும் பூச்சி மருந்தையா குடிப்பது?
விரிவுரையாளர்களுக்கு பகிஸ்கரிப்பால் கிடைக்கும் ஊதிய உயர்வை ஈடு செய்ய அரசு ஏற்றும் விலை/கட்டண ஏற்றங்களை சமாளிக்க இந்த மாத/தின கூலிகளுக்கும், அன்றாடம் காய்ச்சிகளுக்கும் இயலுமா? எல்லாமே எங்குமே சுயநலம்!!! இன்றைய இலங்கை அரசிடம் தீர்வு ஒன்று கிட்டும் என நம்பி மாணவர்களது படிப்பை பகடைக்காய் ஆக்குவதென்பது முழு முட்டாள்தனமன்றி வேறில்லை!!
விரிவுரையாளர்கள் வாரக்கணக்கில் பகிஸ்கரிப்பு என அலறியது இத்தனை நாட்களாக கேட்காமல் இரண்டு நாட்களுக்கு முன்னர் நித்திரையில் இருந்த இலங்கை அரசு திடீரென கண் விளித்து அறிவித்த அறிவிப்புத்தான் காலவரையற்ற பல்கலைக்கழக மூடுவிழா!!! இந்த அதிர்ச்சி தீருமுன்னம் இன்று வெளியாகி இருக்கும் செய்தி பாடசாலை ஆசிரியர்கள் சங்கம் 13 அம்ச கோரிக்கைகள் என்னும் பெயரில் ஊதிய உயர்வு கேட்டு பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொள்ள போகிறார்களாம்!!!
ஏற்கனவே பாடசாலைகளில் சிலபஸ் முடிப்பதில்லை என்கின்ற காரணத்தை காட்டி பல தனியார் டியூசன்கள் கல்லா நிரப்பிக்கொண்டிருக்கும் வேளையில் இந்த செய்தி தனியார் டியூசன்களுக்கும், ஆசிரியர்களுக்கும் வாயில் சக்கரை போட்டதை போலிருக்கும்!! இது எங்கு சென்று முடியப்போகின்றதோ தெரியவில்லை!!! இலங்கை அரசுக்கு இவர்களது பகிஸ்கரிப்பு செய்தி செவிடன் காதில் ஊதிய சங்கு!! இன்னும் எத்தனை நாளைக்கு இவர்களும் சங்கை ஊதாப்போகின்றார்கள்!! அவர்களும் எவ்வளவு நாட்களுக்கு கேளாதவனாக இருக்கப்போகின்றார்கள்!! இதனால் எத்தனை மாணவர்கள் மனரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்படப் போகின்றார்கள்!! என்பதற்கு காலம்தான் பதில் சொல்லணும்!!
No comments:
Post a Comment