Search This Blog

Pages

Saturday, September 8, 2012

இடம்பெற்ற தேர்தல் நேர்மையானதாக இருந்தால்..அரசின் நிலை??

electionresults2
JM:இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் வெளியிடப்பட்ட தகவல்கள் குறித்து அரசின் புலனாய்வுப் பிரிவு அரச மேல் மட்டத்தினரால் உசார்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. வடமத்திய சப்ரகமுவ மாகாணங்களில் அரசு வெற்றியீட்டினாலும் அதன் முக்கிய எதிர்ப்பார்ப்பான கிழக்கு மாகாண சபையை கைப்பற்றும் கனவு நழுவுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளது.
களனிப் பல்கலைக்கழக பேராசிரியர் ரோஹன லக்ஷ்மண பிரியதாஸவுடைய வழிநடாத்தலில் அப் பல்கலைக்கழகத்தின் மக்கள் தொடர்பாடல் பிரிவு மாணவர்கள் நடாத்திய இக் கணிப்பீடு பற்றிய செய்தி  அரச அச்சு ஊடகங்களில் வெளிவந்தமை அரசை மேலும் குழப்பித்திற்கு ஆளாக்கியுள்ளது.
மூன்று ஜனாதிபதித் தேர்தலகள்; உட்பட ஐந்து தேர்தல்களுக்கு இப் பல்கலைக்கழகத்தின் மக்கள் தொடர்பாடல் பிரிவு கருத்துக் கணிப்புகளை நடாத்திய அனுபவமுள்ள அமைப்பு என்று பேராசிரியர் ரோஹன லக்ஷ்மண் பிரியதாஸ குறிப்பிட்டார்.
மக்கள் மத்தியில் செல்வாக்குள்ள அரசியல் தலைவராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திகழ்வதாக கருத்துக் கணிப்பில் பங்களித்தவர்களில் 60 வீதமானவர்கள் குறிப்பிட்டிருந்தாலும் அரசாங்கத்திலுள்ள ஏனைய அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோரின் அடாவடித்தனமான நடவடிக்கைகளும், இஸட் கோர் குளறுபடி, அண்மையில் நடைபெற்ற ஐந்தாம் தர புலமை பரீட்சையில் வினாக்கள் பரீட்சைக்கு முன்னதாகவே கசிந்ததாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு என்பனவும் அரசின் வாக்கு வங்கியில் பெரும் சரிவை ஏற்படுத்தியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, இலங்கை அரசியல் உரிமைகள் ஆய்வு மையம் நடாத்திய நடுநிலையான வெளிப்பாட்டுத் தன்மையுடன் கூடிய ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ள பின்வரும் தகவல்கள் அரசின் கிழக்கு மாகாண தேர்தலுக்குப் பொறுப்பான அமைச்சர் ஒருவரின் மூலம் அங்கு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள ஏனைய அமைச்சர்களிடம் கொடுக்கப்பட்ட போது மிகவும் காரசாரமான முறையில் அந்த அமைச்சர்களை பிரதான அமைச்சர் கடிந்து கொண்டாராம்.
2008 மாகாண சபைத் தேர்தலில் வெற்றியின் பின்னணியில் பல அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்ட அரசு தான் மிகவும் பலமாக இருக்கும் இன்றைய சூழ்நிலையில் இலகுவாக கிழக்கு மாகாணத்தை வெற்றிகொள்ள களநிலவரம் இருந்த நிலையில் ஆயுட் காலத்திற்கு முன்பே அம் மாகாண சபையை கலைத்து, தனது வெற்றியை 2012 இல் உறுதி செய்துகொள்வதற்காகவே தேர்தலை பிரகடனம் செய்தது.
இலங்கை அரசியல் உரிமைகளுக்கான ஆய்வு மையம் 2012 இல் மே, ஜூன் மாதங்களில் நடாத்திய கணிப்பீடு அடங்கிய அட்டவணை இதைத் தெளிவுபடுத்துகிறது. ஆனால், அதே ஆய்வு மையம் ஆகஸ்ட் 15 – 25 ஆகிய திகதிகளுக்கிடையில் நடாத்திய கணிப்பீட்டின் விபரங்கள் அரச ஆதரவு தேர்தல் பிரசாரங்களின் பிறகு பெருவீழ்ச்சி கண்டிருப்பதை சுட்டுகிறது. இலங்கை அரசியல் உரிமைகளுக்கான ஆய்வு மையத்தின் அவ் அறிக்கையில் இவ் வீழ்ச்சிக்கான காரணங்களாக பின்வருவன குறிப்பிடப்பட்டுள்ளன.
1. முன்னைய மாகாண முதலமைச்சர் சிவனேசத்துறை சந்திரகாந்தன் (பிள்ளையான்), அரசின் பிரதியமைச்சர் கருணா அம்மான் ஆகியோருக்கிடையில் நடைபெறும் உள்ளகப் போட்டி காரணமாக கடந்த தேர்தலில் அரசு பெற்ற தமிழ் வாக்குகளின் 27 வீதமான வாக்குகள் தமிழர் விடுதலைக் கூட்டணிக்குத் திரும்பியுள்ளது.
2. முஸ்லிம் பள்ளிவாயல் மீதான பௌத்த பேரினவாதத்தின் தலையீடு 30 & ற்கும் 40 & ற்கும் இடைப்பட்ட அரச ஆதரவாளர்களை மாறி வாக்களிக்க தூண்டியுள்ளது.
3. நீர்பாசன வசதிகள், உரமானியம், நெல் கொள்வனவு என்பவற்றில் அதிருப்தியடைந்துள்ள சிங்கள வாக்காளர்கள் (அம்பாறை, சேருவிலை என்பன விவசாயத்தை பிரதானமாக கொண்ட சிங்கள குடியேற்ற பிரதேசங்கள் ஆகும்) தமது எதிர்ப்பை காட்டுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் வாக்களிக்க முடிவெடுத்துள்ளதால் 17  & சிங்கள வாக்கு வங்கியின் சரிவை அரசு முகங்கொடுக்க நேர்ந்துள்ளது.
யுத்த வெற்றியின் மக்கள் களிப்பை மூலதனமாகக் கொண்டு தேர்தல்களை சந்திக்கும் காலம் கடந்து விட்டதாக அரசின் புலனாய்வுப் பிரிவு அரசை அறிவுறுத்தியிருந்ததன் அடிப்படையில் அரசு மாற்று வழியாக பாரிய அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்தத் தொடங்கியிருக்கிறது. ஆனால், ஜே.வி.பி, ஐக்கிய தேசியக் கட்சி என்பன முன்வைக்கும் பின்வரும் இரண்டு பிரதான குற்றச்சாட்டுக்கள் சிங்கள பெரும்பான்மையினர் மத்தியில் அரசின் ஆதரவை பின்தள்ளுவதற்கு துணைபோயுள்ளதாக அரச புலனாய்வுப் பிரிவின் அண்மைக்கால அறிக்கை தெரிவிக்கிறது.
1. அபிவிருத்தி வேலைகள் என்ற மாய விளையாட்டுக்காக அரசு பெரும் கடன் சுமையை மக்கள் மீது சுமத்துவதடன், இம் முதலீடுகளில் கணிசமான ஊழல் மோசடி செய்து அரசியல்வாதிகள் பணம் சம்பாதிப்பது.
2. பாரிய அபிவிருத்தி திட்டங்கள் ஹம்பாந்தோட்டை  மாவட்டத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டிருப்பதுடன், கிழக்கு மாகாணத்தில் இவ்வாறான எந்தவொரு பாரிய அபிவிருத்தித் திட்டமும் நடைமுறைப்படுத்தப்படாமை.
மேற்கூறிய அனைத்துக் காரணிகளையும் அடிப்படையாகக் கொண்டு இலங்கை அரசியல் உரிமைகள் ஆய்வு மன்றம் நேரடியாக மூன்று மாவட்டங்களிலும் உள்ள மக்களை தொடர்பு கொண்டு நடாத்திய ஆய்வுகளின் புள்ளிவிபரங்களும், ‘அபி பௌத்தயோ’ என்கின்ற அனைத்து பல்கலைக்கழக மாணவர்களையும் கொண்ட இயக்கம் நடாத்திய ஆய்வுகளின் புள்ளிவிபரங்களும் பெருமளவில் ஒத்துப்போகும் தன்மை கொண்டுள்ளமை இவ் ஆய்வுகளின் நேர்மைத் தன்மையை பிரதிபலிப்பதாகவுள்ளது.
மிகக் குறுகிய ஆசன வித்தியாசத்தில் கடந்த கிழக்கு மாகாண சபையை ஆளும் அரசு கைப்பற்றியதற்கு அக்கறைப்பற்று தொட்டு பொத்துவில் வரையான பிரதேசங்களில் நடைபெற்ற தேர்தல் மோசடியே பிரதான காரணி என்பது இங்கு கவனிக்கப்பாலது. வழமையாக 65 & வாக்களிப்பே எல்லா இடங்களிலும் பதிவாகும் போது இப் பிரதேச வாக்குச் சாவடிகளில் மாத்திரம் 90 & - 97 & வாக்குகள் பதிவாகியிருந்தமை இக் குற்றச்சாட்டை நிரூபிக்க போதுமானதாகும்.
ஆனால், 2010 ஜனாதிபதித் தேர்தலில் இதே பிரதேசத்தில் 58.56 & மானோரே வாக்களித்திருந்தமை இக் குற்றச்சாட்டை நிரூபிக்க மற்றுமொரு சான்றாகும்.
ஆளும் அரச கூட்டணியின் வெற்றியைத் தீர்மானிக்கும் மாவட்டமான அம்பாறையின் தெஹியத்தகண்டிய பிரதேசத்தில் முஸ்லிம் காங்கிரஸ் 49 கிளைகளை நிறுவி பல அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்தி இருப்பதனால் சுமார் 4500 – 7000 சிங்கள வாக்குகளை அப் பிரதேசத்தில் இலகுவாக பெறும் வாய்ப்புள்ளதாக ‘அபி பௌத்தயோ’ அமைப்பு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதுடன் இதனால் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் – ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இடையிலான வாக்கு வித்தியாசம் 10 ஆயிரம் அளவில் விரிவடைவதை அரசு கவனிக்க வேண்டுமென்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் அபேட்சகரும் முன்னாள் மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவருமான தொழிலதிபரான தயா கமகேவுடைய செல்வாக்கு அரசுக்கான ஆதரவு தளத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் அதே அறிக்கை தெரிவிக்கிறது.
அரசுடன் சேர்ந்து கேட்டு ஆறு ஆசனங்களைப் பெறுவதற்கு திட்டமிட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சிங்கள வாக்கு வங்கியில் ஏற்படுத்தும் தாக்கம் காரணமாக 90 ஆயிரம் வாக்குகளுக்கு அதிகமாக பெற்று அம்பாறை மாவட்டத்தை கைப்பற்றும் அதே சந்தர்ப்பத்தில் 7 அல்லது 8  ஆசனங்களாக தன் ஆதிக்கத்தினை நிலைநிறுத்தும் தற்போதுள்ள வாய்ப்பை உடனடியாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு இவ் பௌத்த அமைப்பு அரசின் பங்காளிகளான ஹெல உருமயவினரை வலியுறுத்தியிருக்கிறது.
ஐ.ம.சு.மு. வின் முஸ்லிம் கட்சிகளில் பிரதான கட்சியான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து கேட்பதும் அதேவேளை, அரசின் பாங்காளிக் முஸ்லிம் கட்சிகளான தேசிய காங்கிரஸ், அகில இலங்கை காங்கிரஸ் ஆகியவற்றின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் மூவர் உட்பட அக்கறைப்பற்று நகரசபையின் முன்னாள் தவிசாளர் என்போர் (1. ஹஸன் மௌலவி, 2. துல்ஷான், 3. ஜவாஹர் சாலி, 4. தவம்) முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கேட்பதும் முஸ்லிம் காங்கிரஸிலிருந்து எவரும் அரச அணியில் இணையாததும் மாகாணத்தை முஸ்லிம் காங்கிரஸ் வெற்றிகொள்வதற்கு வாய்ப்பாக அமைகிறது என்று இலங்கை அரசியல் உரிமைகளுக்கான ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
தமிழ் வாக்காளர்களை பெருமளவில் கொண்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர் விடுதலை கூட்டணியினர் முதன் முறையாக களம் இறங்கியிருப்பதனாலும் ஆயுதக் குழுவினரின் அட்டகாசங்கள் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதனாலும் அம் மாவட்டத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறும் வாய்ப்பு அவர்களுக்கு உள்ளதாக இவ் அமைப்பு சுட்டிக்காட்டுகிறது. ஐக்கிய தேசிய கட்சி மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும் பின்னடைவை சந்திக்க நேரும் அதேநேரம், முன்னாள் அமைச்சர் அமீர் அலி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தற்போதைய ஏறாவூர் நகரசபைத் தலைவருமான அலீ சாஹிர் மௌலானா ஆகியோரின் ஆதிக்கம் முஸ்லிம் காங்கிரஸிற்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் சவாலாகவுள்ளதாகவும் இவ் அறிக்கை சொல்கிறது.
அரச அணியும், முஸ்லிம் காங்கிரஸூம் தலா இரண்டு ஆசனங்களை பெரும் வாய்ப்பே மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளது. அரசு பெறும் இரு ஆசனங்களும் அரசில் கேட்கும் பிள்ளையான், கருணா சார்பு வேட்பாளர்களுக்கு கிடைக்குமென்பதால் முஸ்லிம் காங்கிரஸ் அணிக்கு சார்பாக வாக்களிக்க இங்குள்ள அரச சார்பு முஸ்லிம்கள் விரும்புவதாகவும் அவ்வறிக்கை மேலும் சுட்டிக்காட்டுகிறது.
திருகோணமலை மாவட்டத்தில் மாத்திரமே சமநிலையான போட்டியும் முன்னைய 2008 தேர்தல் முடிவையொத்த தேர்தல் முடிவும் அமையும் என்றும் இ.அ.உ.ஆ.மையம் சுட்டிக்காட்டியுள்ளது.
மொத்தத்தில் மட்டக்களப்பு மாவட்டம் தமிழர் விடுதலை கூட்டணி வெற்றிபெறும் கட்சியென தீர்மானிக்கும் அதேநேரத்தில் அம் முடிவுகளில் மாற்றம் ஏற்படுத்தி முஸ்லிம் காங்கிரஸை முன்னணிக்கு கொண்டு வரும் வாய்ப்பு அம்பாறையில் நிலவுவதாக தெரிகிறது.

No comments:

Post a Comment